பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 14 – நாடு இப்பொழுது வடகிழக்கு பருவமழைக்காலத்தின் இறுதி கட்டத்தில் இருப்பதால், தற்போது காணப்படும் வெப்பமான வானிலை அடுத்த மார்ச் இறுதி வரை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்த காலக்கட்டத்தில், மேக மூட்டமும், மழைப்பொழிவும் பொதுவாக பெரும்பாலான இடங்களில் குறைந்தே காணப்படும்.
குறிப்பாக, பேராக், பஹாங் மற்றும் கிளந்தான் உட்பட தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் அந்நிலை காணப்படும் என “MetMalaysia” எனும் மலேசிய வானிலை ஆய்வு துறையின் தலைமை இயக்குனர் முஹமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு மழை பெய்யாததால், வானிலை வழக்கத்தை விட வெப்பமாகவும், வறண்டும் இருக்குமென ஹெல்மி சொன்னார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரையில் நாட்டில் ஏற்படக்கூடிய வழக்கமான தொடர் நிகழ்வு இது.
இந்த காலகட்டத்தில், நாட்டின் சில பகுதிகளில், தட்ப வெப்ப சூழல் 35 பாகை செல்சியஸைத் தாண்டும்.
இதுவரை, மலேசிய வானிலை ஆய்வுத் துறையால் பதிவுச் செய்யப்பட்ட அதிகபட்ச வெப்ப நிலை 36.9 பாகை செல்சியஸ் ஆகும். அதுவும் கடந்தாண்டு பிப்ரவரி பெர்லீஸ், சூப்பிங்கில் பதிவுச் செய்யப்பட்டது.
இந்நிலையில், எல் நினோ வெப்ப பருவநிலை மாற்றம், நம் நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், வெயில் காலத்தில் நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.