காஸா பகுதியில் வாழும் 19 லட்சம் மக்கள் அதாவது சுமார் 80 விழுக்காட்டினர் ஏற்கனவே தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துவிட்ட நிலையில் இஸ்ரேல் மீண்டும் வேறு இடங்களுக்கு செல்ல போட்ட உத்தரவால் இனியும் எங்கே செல்வது என தெரியாமல் தத்தளிக்கின்றனர்.
கான் யூனிஸ் நகரில் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தரப்புகள் மீது நடத்துகின்ற தாக்குதலில் பொது மக்களும் பலியாவதோடு காயமுற்றவர்கள் மற்றும் அகதிகள் தங்குவதற்கான பாதுகாப்பான இடமின்றி தவிப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா-வின் வடப் பகுதியில் தீவிர தாகுதலை முன்னர் மேற்கொண்ட இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை, ஹமாஸ் எங்கிருந்தாலும் விடமாட்டோம் எனக்கூறி தற்போது தென் காஸாவையும் குறி வைத்து வேகமாக நகர்ந்து வருகிறது.
இதுவரை 800க்கும் மேற்பட்ட ஹமாஸ்சின் நிலத்தடி ரகசிய சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளதோடு அதில் 500 அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
தற்போது காஸாவில் இணையத்தொடர்பும் இல்லாதலால் மக்கள் அவசர உதவி கேட்கவோ, குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவோ முடியாத நெருக்கடியிலும் சிக்கி கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து 1,200 பேரை கொன்றதை அடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இதுவரை காஸாவில் 15,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது. அதில் 6,000 பேர் குழந்தைகள் எனவும் அது குற்றம்சாட்டியுள்ளது.