தெஹ்ரான், ஜனவரி 8 – ஈரானில், பொது ஒழுங்கை மீறிய குற்றத்திற்காகவும், தலையை மறைக்க தவறிய குற்றத்திற்காகவும், பெண் ஒருவருக்கு 74 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதனை அந்நாட்டு நீதித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ரோயா ஹெஷ்மதி எனும் அப்பெண், தெஹ்ரானில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பொது இடங்களில், “ஒழுங்கீன முறையில்” தோன்றி, அவ்வாறு செய்ய மற்றவர்களையும் ஊக்குவித்ததாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அதனால், ஈரானின் பொது சட்டங்கள் மற்றும் ஷரியா சட்டங்களுக்கு உட்பட்டு அப்பெண்ணுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பெண்கள் தங்கள் கழுத்தையும், தலையையும் மறைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 2022-ஆம் ஆண்டு பிற்பகுதியில், தொடங்கிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால், அந்த விதிமுறைகளை மீறும் செயல்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், ஆடை நெறிமுறையை மீறிய குற்றத்திற்காகத், தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம் பெண் மாசா அமினி, மரணமடைந்த சம்பவத்திற்கு பின் நடைபெற்ற பேரளவிலான ஆர்ப்பாட்டத்தின் போது, அந்நாட்டு பெண்கள் தங்கள் தலை கவசங்களை தீ கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.