பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 16 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, காப்புரிமைச் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
மலேசிய அறிவுசார் சொத்துக் கழகத்தின் (MyIPO) தலைவர் டாக்டர் முகமட் சூஹான் முகமட் சாயின் அவ்வாறு எச்சரித்தார்.
படைப்பாளிகளின் படைப்புகள் அல்லது உருவாக்கங்கள், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏற்கனவே இந்நாட்டில் அறிவுசார் சொத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட உள்ளடக்கங்களுடன் ஒத்திருந்தால், அது காப்புரிமைச் சட்ட மீறலாகும்.
நாட்டில் அனைத்து அறிவுசார் சொத்துகளும், 2019 வணிக முத்திரைச் சட்டம், 1983 காப்புரிமைச் சட்டம், 1987 பதிப்புரிமைச் சட்டம், 1996 தொழில்துறை வடிவமைப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாதுகாக்கப்படுபவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“உதாரணத்திற்கு AI உதவியுடன் ஒருவர் பாடல் வரியை இயற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால், ஏற்கனவே பாடலாசிரியரோ அல்லது தயாரிப்பாளரோ பதிவுச் செய்திருந்த பாடல் வரிகளை அப்படியே அது ஒத்திருந்தால், அதுவும் சட்ட மீறலே” என சூஹான் தெரிவித்தார்.
இதனிடையே, AI பயன்பாடு மீதான சிறப்பு தர செயல்பாட்டு நடைமுறை ( SOP ) குறித்த விவகாரத்தை வரும் ஜூலையில் சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக அறிவுசார் சொத்து சம்மேளன மாநாட்டில் MyIPO எழுப்பும் எனவும் அவர் சொன்னார்.
AI பயன்படுத்துவோர், காப்புரிமைச் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது அப்படியே விட்டு விடுவதா என்பது குறித்த தெளிவைப் பெறுவதும் அம்மாநாட்டில் தங்களின் குறிக்கோளாகும் என்றார் அவர்.