
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.
இதனால் வாசம் பிடித்து காட்டு யானைகள் நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன; இது வனவிலங்குகளுக்கும் வாகனமோட்டிகளும் இடையில் மோதலை உருவாக்குவதாக, கெடா சுங்கை பட்டாணி Response Team தன்னார்வலர் மொமட் அமிர் ஃபைசால் சுட்டிக் காட்டினார்.
மே 11 முதல் தாங்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில், JRTB நெடுகிலும் பல்வேறு இடங்களில் பழக்குவியல்களைக் கண்டதாக அவர் சொன்னார்.
“காட்டு விலங்குகளுக்கு உணவளிக்கப் போவதாகக் கூறி ஒரு NGO சார்பில் என்னைத் தொடர்புகொண்டார்கள். நான் வேண்டாமென்று தடுத்தேன். ஆனால் என் எச்சரிக்கை மீறப்பட்டுள்ளது என்பது பதிவான புகைப்படங்களில் தெரிகிறது” என facebook பக்கத்தில் படங்களை பகிர்ந்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
மாம்பழங்கள், வாழைப்பழங்களும் JRTB சாலையோரம் நெடிகிலும் குவிக்கப்பட்டிந்தது அப்புகைப்படங்களில் தெரிந்தது.
அப்பகுதி யானைகள், கரடிகள், மலாயா புலிகள், சிறுத்தைகள், தாபீர்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இடமாகும்.
இப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால் இதை பார்த்து, வனவிலங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னும் ஏராளமானோர் புறப்பட்டு விடுவர்.
காட்டு விலங்குகள் அவைகளாகவே உணவு தேடிச் செல்லும் திறனைக் கொண்டுள்ளன; அது இயற்கையின் படைப்பு.
எனவே சாலையோரத்தில் உணவை விட்டுச் செல்வது தவறானது மட்டுமல்ல, பொறுப்பற்றது மற்றும் JRTB-யை தங்கள் அன்றாட பயணத்திற்கு நம்பியிருக்கும் சாலைப் பயனர்களுக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், இது போன்ற பகுதிகளில் வனவிலங்குகளுக்கு உணவுகளை விட்டுச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் தற்போதைக்கு இடமில்லை என, PERHILITAN எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை கூறியுள்ளது.
காட்டு விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்களை எச்சரிக்கும் பலகைகளை வேண்டுமானால் நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கலாம்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இருக்கும் ஒரே வழி என அது விளக்கியது.