
கங்கார், டிசம்பர்-29 – கல்வத் குற்றத்திற்காக பொது இடத்தில் பிரம்படி தண்டனை வழங்குவது அதிகாரத்திலிருப்பவர்களின் முடிவாகும்; அது இஸ்லாத்தின் முடிவல்ல!
எனவே அதனை கேள்வியெழுப்ப உரிமையிருப்பதாக பெர்லிஸ் முஃப்தி டத்தோ மொஹமட் அஸ்ரி சைனுல் அபிடின் (Datuk Mohd Asri Zainul Abidin) கூறியுள்ளார்.
அதிகாரத்திலிருப்பவர்களின் முடிவுகளைக் கேள்வியெழுப்புவதால் இஸ்லாத்தைக் கேள்வி கேட்பதாக அர்த்தமாகாது என்றார் அவர்.
தவறே இழைத்திருந்தாலும் ஒருவரின் அவமானம் மறைக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது;
அப்படிப் பார்த்தால், திரங்கானுவில் கல்வத் குற்றத்திற்காக மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள பிரம்படி தண்டனை முரண்படுவதாக, Dr Maza என பரவலாக அழைக்கப்படும் அவர் சொன்னார்.
அத்தண்டணை இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதல்ல; மாறாக அதிகாரத்திலிருப்பவர்களின் தேர்வாகும்; அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.
ஆக ஆட்சியாளர்களின் முடிவைக் கேள்வியெழுப்புவதொன்றும் தவறாகாது என தனது facebook பதிவில் Dr Maza கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று குவாலா திரங்கானு மசூதியில், 42 வயது முஸ்லீம் ஆடவருக்கு இஸ்லாமிய ஷாரியா சட்டப்படி பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் மீண்டும் கல்வத் குற்றம் புரிந்ததற்காக அவருக்கு 6 பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சுமார் 90 பேர் முன்னிலையில் அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டதை, மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM உள்ளிட்ட தரப்புகள் ஆட்சேபித்திருந்தன.
அது மனித உரிமை மீறல் என அவை கண்டனம் தெரிவித்தன.