சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகத்தின் செந்தமிழர் மாணவர் கழக ஏற்பாட்டில் ஜாலினான் காசோ நிகழ்ச்சி

கோலாலம்பூர், மே 16 -தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி என்பது தனிமனிதப் பொறுப்பாக மட்டுமல்லாது, சமூகத்தின் ஒட்டுமொத்த முயற்சியாக அமைகிறது.அவ்வகையில் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் பல்கலைகழக மாணவர்களின் பங்கு மிக மிக அளப்பரியது.
இதன் அடிப்படையில் அண்மையில் திரெங்கானு சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் செந்தமிழ் மாணவர் கழகம் ஏற்பாட்டில், கணேஷ்வரன் ரமேஷ் தலைமையில் “ஜாலினான் காசே -9.0’ எனும் நிகழ்ச்சி, பேராக்கில் அமைந்துள்ள தேசிய வகை பங்கோர் தமிழ்ப்பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
செந்தமிழ் மாணவர் கழகத்தின் அடையாள நிகழ்ச்சியான தாளம் 9.0 மூலம் கிடைக்கபெற்ற நன்கொடையின் மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடப்பட்டது.
தமிழின்பால் கொண்ட எல்லையற்ற பற்றாலும் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையாலும், ஒரு நிறைவான நிகழ்வாக பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழக மாணவர்களின் முழு ஈடுபாட்டுடன், மாணவர்களுக்கு பல்வேறு சுவாரசியமான மற்றும் அறிவுச் சார்ந்த விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
மேலும் மாணவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இதன் வழி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நல்லுறவு ஏற்படுவதற்கும் , மாணவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாகவும் அமைந்தது.
தமிழ்ப்பள்ளி நம் அடையாளம். அதுவே நம் வாழ்வின் ஓர் உயிர்ச்சி என்ற சிந்தனையோடு சுல்தான் சைனல் அபிடின் மாணவர்கள் வெற்றிகரமாகத் தங்களின் சமூதாயப் பணியை ஆற்றியது பெருமைகுரிய நிகழ்வாக அமைந்தது.