
சுங்கை பட்டாணி, மே-19 – கெடா, சுங்கை பட்டாணியில் போலீஸிடமிருந்து தப்பிக்க 16 வயது பையன் மேற்கொண்ட முயற்சி அவனுக்கே பாதகமாய் முடிந்தது.
ஜாலான் லெஞ்சோஙான் பாராட்டில் உள்ள சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் வைரலும் ஆகியுள்ளது.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவனான அப்பையனும், பின்னால் அமர்ந்திருந்த 18 வயது நண்பனும் முன்னதாக குவாலா மூடா ரோந்து போலீஸால் நிறுத்தப்பட்டனர்.
வாகனமோட்டும் உரிமம் எங்கே என போலீஸ் கேட்ட போது, இருவரும் தப்பியோடினர்; போலீஸும் சுமார் 1 கிலோ மீட்டருக்கு அவர்களைத் துரத்தியது.
அப்போது சிவப்பு விளக்கை மீறிச் செல்ல அவர்கள் முயன்ற போது, ஒரு பெண்மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதினர்.
கீழே விழுந்ததில் இருவருக்கும் முகத்திலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
மூவருமே சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.
ஆபத்தான முறையில் வாகனமோட்டியதன் பேரில் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.