
ஹைதராபாத், செப்டம்பர்-23, தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவி, கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் மிகவும் படைப்பாற்றல் மிக்க நட்சத்திரம் மற்றும் நடனக் கலைஞர் என்ற அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
45 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் 156 திரைப்படங்களில் 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகளை நிகழ்த்தியதன் அடிப்படையில் அவ்விருதுக்கு அவர் தேர்வானார்.
விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீவூட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் கலந்து கொண்டு, சிரஞ்சீவிக்கு பாராட்டுச் சான்றிதழை எடுத்து வழங்கினார்.
தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சிரஞ்சீவி, தெலுங்கு தவிர்த்து, தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
பண்பட்ட நடிப்போடு அசாத்திய நடனத் திறமையும் கொண்டவரான சிரஞ்சீவி, 80-ஆம் ஆண்டுகளிலிருந்தே வித்தியாசமான நடன அசைவுகளால் தெலுங்கு திரையுலகில் பெரும் புகழ்பெற்று திகழ்ந்தார்.
முன்னாள் அரசியல்வாதியுமான 69 வயது சிரஞ்சீவிக்கு, கலைத்துறைக்கு ஆற்றியப் பணிக்காக கடந்த மே மாதம் தான் இந்திய அரசாங்கத்தின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.