
கோலாலம்பூர், மே-28 – அமைச்சரவையிலிருந்து விலகுவதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் நிக் நஸ்மியும் அறிவித்திருப்பது வெறும் அரசியல் நாடகமே.
இது ஒரு மதிக்கத்தக்க முடிவோ அல்லது அதிர்ச்சியடைய வேண்டிய விஷயமோ அல்ல என, பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
ஒருவேளை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதே என மனம் வெம்பி இருவரும் பதவி விலகியிருந்தால் பாராட்டலாம்.
ஆனால், கட்சித் தேர்தலில் பேராளர்களால் நிராகரிக்கப்பட்டதால் விளைந்த பதவி விலகல் இது.
அதோடு மக்களிடம் அனுதாபம் தேடும் முயற்சியும் கூட…
அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு இப்போதே ஆதரவுத் திரட்டுவதற்கான ஓர் யுக்தியே இது.
மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்தைத் தேடும் முயற்சி என சஞ்சீவன் சாடினார்.
பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து ரஃபிசியும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் பதவியிருந்து நிக் நஸ்மியியும் விலகுவது இன்று உறுதியானது.
கட்சித் தேர்தலில் தோல்வியுற்றதால் அமைச்சரவையில் இருக்கும் தார்மீக உரிமையைத் தாங்கள் இழந்திருப்பதாகக் கூறி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
ரஃபிசியின் பதவி விலகல் ஜூன் 17-ஆம் தேதியும் நிக் நஸ்மியின் பதவி விலகல் ஜூலை 4-ஆம் தேதியும் நடப்புக்கு வருகின்றன.