கோலாலம்பூர், டிச 2 – உலக இந்திய வம்சாவளியினர் அமைப்பான கோபியோவின் அனைத்துலக கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு நேற்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது. இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு நடந்த இந்த 3 நாள் மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 300 பேராளர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் B.N ரெட்டியும் தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கோபியோவின் தலைவர் குணசேகரன் உட்பட சிறப்பு பிரமுகர்கள், வணிகர்கள், பேராளர்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர்.
மலேசிய இந்தியர்கள் வணிக நுணுக்கங்களை கற்றுக் கொண்டு அனைத்துலக அளவிலான பிற வணிகர்களோடு நட்புறவை ஏற்படுத்தி, வாய்ப்புகளை அறிந்து, இத்துறையில் சாதிப்பதற்கு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோபியோவின் தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.
இந்த மாநாடு தங்களின் வர்த்தகத்துக்கான புதிய அறிமுகத்தையும் வாய்ப்பையும் அதிகரிக்க உதவும் என பெரிதும் நம்புவதாக இதில் கலந்துக் கொண்ட பேராளர்கள் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துக் கொண்டனர்.
வர்த்தகத்தில் தொடர்பு என்பது மிக முக்கிய அம்சம். அந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இந்த மாநாடு இந்திய வம்சாவளியினர் இன்னும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான ஒரு தளம் என்பதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் இதுபோன்ற மாநாடுகள் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என இதில் கலந்துக் கொண்டவர்கள் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினர்.