குவாந்தான், ஏப்ரல்-3, நோன்புப் பெருநாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோர், Balik Kampung பாரத்தைப் பூர்த்திச் செய்து விட்டு போகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அப்பாரத்தைப் பூர்த்திச் செய்வதன் மூலம், சம்பந்தப்பட்டோரின் குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போதைய ரோந்துப் பணிகளை மேற்கொள்ள போலீசுக்கு வசதியாக இருக்கும்.
பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் அவ்வாறு கூறியுள்ளார்.
அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் அப்பாரங்களைப் பெற்று பொது மக்கள் அவ்வாறு செய்யலாம் என்றார் அவர்.
நோன்புப் பெருநாளுக்கு நீண்ட விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோர், தங்களின் வீட்டுடைமைகள் குறித்து கவலைக் கொள்ளாதிருக்க அது உதவும் என டத்தோ ஸ்ரீ யாஹ்யா சொன்னார்.
விழாக்காலங்களின் போது, வீடுகள் குறிப்பாக நகரங்களில் காலியாக இருக்கும் வீடுகளைக் கொள்ளையர்கள் இலக்கு வைக்கலாம் என்பதால், இந்த Balik Kampung கால ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.