கோலாலம்பூர், மார்ச் 28 – ஜெர்மனியில் பதுங்கியிருக்கும் மலேசியரான என்.கணேஸ்பரனின் செயலை மஇகா வன்மையாகக் கண்டிக்கிறது.
இஸ்லாம், சிலாங்கூர் சுல்தான் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகியோரை இழிவுப்படுத்தும் வகையில் காணொளிகளை வெளியிட்டு வரும் கணேஸ்பரனின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என, மஇகா தொடர்புக் குழு தலைவர் தினாலன் டத்தோ டி. ராஜகோபாலு சாடியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய என். கணேஸ்பரன், மாலாய் ஆட்சியாளர்கள், மதம் மற்றும் அரசியல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து காணொளிகளை வெயிடுவது இது முதல் முறை அல்ல என போலீசார் கூறியுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை அவருக்கு எதிராக 22 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டு, பேரரசர் மற்றும் பிரதமரை அவமதித்ததற்காக, என்.கணேஸ்பரனுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டது.
என்.கணேஸ்பரன் போன்றவர்கள், நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
அவரது செயல், பல்லின மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தக்கூடும். மத உணர்வுகளை தூண்டி, அமைதி இன்மையையும், பிளவையும் உண்டாக்க கூடும்.
அதனால், கணேஸ்பரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மஇகா வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, நாட்டிற்கு விசுவாசமாக இல்லாத கணேஸ்பரனின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமென, தினாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.