
கோலாலம்பூர், அக்டோபர்-1,
VEP எனப்படும் அந்நிய வாகனங்களுக்கான நுழைவு பெர்மிட் இல்லாமல் மலேசியாவுக்குள் வந்த 3,148 சிங்கப்பூர் வாகனங்களுக்கு, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அபராதங்கள் விதித்துள்ளது.
இதன் மூலம் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.
ஒவ்வொரு அபராதமும் RM300 ஆகும்; அதை செலுத்திய பிறகே வாகனம் எல்லையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக, JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli கூறினார்.
இதுவரை 306,449 சிங்கப்பூர் வாகனங்கள் VEP-க்கு இணையம் வாயிலாக பதிவுச் செய்து, RFID குறியீட்டையும் பொருத்தியுள்ளன.
இந்த நடவடிக்கை எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வெளிநாட்டு வாகனங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், டோல் கட்டண வசூலிப்பை எளிதாக்கவும் மற்றும் சாலை விதிமுறைகளின் அமுலாக்கத்தை சீர்படுத்தவும் அவசியம் என்றார் அவர்.
மலேசியாவில் இருக்கும் போது அனைத்து வாகனங்களும் சட்டத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சொன்னார்.
VEP கடந்தாண்டு அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தப்பட்டது; என்றாலும் எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை எடுக்காமல் ஓட்டுநர் கல்விக்கும் விழிப்புணர்வுக்கும் வழிவிடும் வகையில், சற்று தளர்வு வழங்கப்பட்டது.
போதிய கால அகவகாசம் வழங்கப்ட்ட பிறகு, கடந்த ஜூலை 1-ஆம் தேதி அது முழுமையாக அமுலுக்கு வந்தது.