
கோலாலம்பூர், ஜூன்-7 – KL Tower எனப்படும் கோலாலம்பூர் கோபுரத்தில் Wawasan 2020 அல்லது 2020 தூரநோக்கு டைம் கேப்சூல் இருந்த இடத்தில் கண்ணாடி தகடு அகற்றப்பட்டதில், உள்நோக்கம் எதுவுதுமில்லை.
சிலர் கூறுவது போல் ‘வரலாற்று அம்சங்களை மறைக்கும்’ நோக்கத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை என, கோலாலம்பூர் கோபுரத்தின் புதிய நிர்வாகமான LSH Service Master Sdn Bhd (LSHSM) தெளிவுப்படுத்தியது.
உண்மையில் வருகையாளர்களின் பாதுகாப்புக் கருதியே அந்தக் கண்ணாடி பலகை அகற்றப்பட்டதாக, அதன் தலைமை செயலதிகாரி கைரில் ஃபைசால் ஒத்மான் கூறினார்.
“அக்கண்ணாடி தகடானது, டைம் கேப்சூல் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தை மூடுவதற்கே ஆரம்பத்திலிருந்து அங்கிருந்தது; ஆனால் அண்மையில் டைம் கேப்சூல் திறக்கப்பட்ட பிறகு அந்தக் கண்ணாடி தகடு பகுதி காலியாக விடப்பட்டது; இதனால் இதற்கு முன்பு போல் அதனை பாதுகாப்பாக மூட முடியவில்லை” கைரில் விளக்கினார்.
அப்பகுதியைக் கடந்துசெல்லும் வருகையாளர்களின் பாதுகாப்புக்கு இது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றார் அவர்.
இது தவிர, அக்கண்ணாடி பலகையில் பழைய வர்த்தக சின்னமே உள்ளது; கோபுரத்தின் நிர்வாகம் மறுதோற்றம் அடைந்திருக்கும் நிலையில் பழையச் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக காட்சிக்கு வைப்பது பொருத்தமாக இருக்காது.
அதற்காக அந்த கண்ணாடிப் பலகையை நாங்கள் தூக்கி வீசி விடவோ அல்லது அழித்து விடவோ இல்லை; பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளோம் என்றார் அவர்.
1996-ஆம் ஆண்டு அப்போதையப் பிரதமர் Dr மகாதீர் மொஹமட் டைம் கேப்சூலை புதைத்து வைத்ததன் அடையாளமாய் இருந்த அக்கண்ணாடி பலகை உள்நோக்கத்துடன் அகற்றப்பட்டுள்ளதாக, பெர்சாத்து கட்சித் தலைவர் ஒருவர் முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2020-ஆம் ஆண்டில் மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகியிருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக புதைக்கப்பட்ட அந்த டைம் கேப்சூல் 28 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி மகாதீர் கையாலேயே திறக்கப்பட்டது.