
செர்டாங், மார்ச்-11-சிலாங்கூர், செர்டாங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கூறப்படும் ஒரு சிறிய சீனக் கோயில் தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் சில மணி நேரங்களுக்குள் அது மீண்டும் திறக்கப்பட்டது.
ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள குடியிருப்பு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள அந்த Dato Gong கோயில், முன்னதாக இரவு 7 மணிக்கு மேல் நகராண்மைக் கழக அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
ஆனால் பல ஆண்டுகளாக அங்குள்ள இந்த வழிபாட்டு தலம் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி (Wong Siew Ki) உடனடியாக தலையிட்டு நகராண்மைக் கழக அதிகாரிகளையும் துணை மேயரையும் தொடர்புகொண்டார்.
அதன் பின்னரே இரவு சுமார் 9.50 மணியளவில் சீல் அகற்றப்பட்டு அந்த சீனக் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.
சம்பவம் விரைவாக தீர்க்கப்பட்டதால் அப்பகுதி வாழ் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மத வழிபாட்டு இடங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும், இடமாற்றம் தேவை ஏற்பட்டால் அது குறித்து அதிகாரிகள் உள்ளூர் மக்களுடன் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வோங் ஸியூ கி தெரிவித்தார்.



