
ஷா ஆலாம், ஏப்ரல்-4- சிலாங்கூரைச் சேர்ந்த நிறுவனமொன்றின் இயக்குநர், அந்நிய செலாவாணி மோசடியில் 5.5 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். 42 வயது அந்நபர் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரிங்கிட்டை வியட்நாமிய நாணயமான டாங்கிற்கு மாற்ற முயன்றபோது அப்பணத்தை இழந்ததாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
பாதிக்கப்பட்டவர், ஏற்கனவே சிறியத் தொகைகளை உட்படுத்திய நாணய மாற்றங்களுக்கு தமக்கு உதவியவரான சரவாக் மீரியைச் சேர்ந்த ஒருவரை அணுகியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் மார்ச் மாத இறுதியில், 6.5 மில்லியன் ரிங்கிட் தொகையை அவர் மாற்ற விரும்பியுள்ளார்; ஆனால் கிடைத்ததோ வெறும் 900,000 ரிங்கிட் மதிப்புள்ள வியட்நாமிய டாங் மட்டுமே. கொடுக்கப்பட்ட 7 வங்கிக் கணக்குகளுக்கு 15 தடவையாகப் பணத்தைப் போடுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஆனால் சந்தேக நபர் சாக்குபோக்குகளைக் கூறி பாக்கிப் பணத்தைத் தராமல் தொடர்ந்து இழுத்தடித்த போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவ்வாடவர் போலீஸில் புகார் செய்தார்.
இந்நிலையில் நாணய மாற்றம் என வரும் போது, பேங்க் நெகாரா மலேசியாவிடம் பதிந்துகொண்டுள்ள நிறுவனங்களுடன் மட்டுமே பரிவர்த்தனையை வைத்துக் கொள்ளுமாறு டத்தோ ஹுசேய்ன் மீண்டும் நினைவுறுத்தினார்.