
கோலாலம்பூர், ஜூன்-6 – நாட்டின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட் கட்டமைப்பான 99 Speed Mart-டின் அனைத்துக் கிளைகளும் வரும் ஜூலை 1 முதல் 1 மணி நேரம் முன்கூட்டியே அதாவது காலை 9 மணிக்கே திறக்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் கடப்பாட்டிற்கு ஏற்ப, அந்நிறுவனத்தின் நேற்றைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சேவை நீட்டிப்பு, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என்பதோடு, மளிகைக் கடை வியாபாரத்தில் 99 Speed Mart-டை தொடர்ந்து முன்னணியில் வைத்திருக்க உதவுமென, 99 Holdings நிறுவனத்தின் தோற்றுநரும் தலைமை செயலதிகாரியுமான லீ தியாம் வா (Lee Thiam Wah) கூறினார்.
“வரும் காலங்களில் நாடு முழுவதும் எங்களின் இருப்பு மேலும் வலுப்படுத்தப்படும், விநியோகக் கட்டமைப்பும் மேம்படுத்தப்படும், அதோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீடித்த நன்மையைக் கொண்டு வருவோம்” என்றார் அவர்.
இந்த சேவை நேர நீட்டிப்பு உட்பட நேற்யை பொதுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் பங்குத்தாரர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.