
அமெரிக்கா, ஜூன் 5 – 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கு தடை விதித்து, 7 நாடுகளிலிருந்து அமெரிக்க பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கி, பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
முற்றிலும் தடைசெய்யப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு விமானங்களில் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதோடு அமெரிக்கா வந்தால் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்படுவார்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பிற்காக மட்டுமே இம்முடிவு எடுக்கப்பட்டதே தவிர இந்தத் தடை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.