
பெட்டாலிங் ஜெயா, மே 14 – இம்மாதம் 16ஆம் திகதி ‘’ஆசிரியர் கல்வி மறுமலர்ச்சியின் ஊக்குநர்’ என்ற கருப்பொருளோடு இவ்வாண்டு ஆசிரியர் தினம் நாடு தளுவிய அளவில் அனுசரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 7.30 மணிக்கு, பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
மலேசிய கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளி பிரிவின் முன்னாள் உதவி இயக்குநர் திரு. பாஸ்கரன் சுப்ரமணியம் அவர்களின் ஏற்பாட்டில், முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ பி கமலநாதன் ஆதரவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வருட பிரார்தனையில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தலைமையாசியர்கள் உட்பட மொத்தம் 35 ஆசியர்கள் பங்கேற்றனர். முன்னாள் கல்வி துணை அமைச்சரும் மலேசியாவின் மக்கள் தொடர்பு பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவருமான டத்தோ பி கமலநாதனோடு மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியனும் கலந்துக் சிறப்பித்தார்.
தான் கல்வி துணை அமைச்சராக இருந்த சமயத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பால் தமிழ்ப் பள்ளிகளின் முன்னேற்றம் அதிகரித்ததென்று கூறிய டத்தோ பி கமலநாதன், ஆனால் மக்கள் ஆசிரியர்களின் உழைப்பை உண்மையில் கவனிக்கவில்லை எனவும் அதனால் ஆசிரியர்களுக்காக தனி குழுவொன்றைத் தொடங்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
இச்சிறப்பு பிரார்த்தனைகளுக்காக ஆசிரியர்களுடன் ஒன்றுபடுவதே நிகழ்ச்சியின் நோக்கம் எனவும் ஆசிரியர் வேலை கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இப்பிராத்தனை ஏற்பாடு செய்திருப்பதாக எஸ்.எஸ். பாண்டியன் அவர்கள் தனதுரையில் பகிர்ந்துக்கொண்டார்.
எட்டாவது ஆண்டாக நடைபெறும் இச்சிறப்பு பிராத்தனை, கடந்த ஆண்டு, நெகிரி செம்பிலான் லோபாக் ஆலயத்தில் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்பட்டது. இந்த பிரார்த்தனை ஆண்டு நிகழ்வாக, ஒவ்வொரு ஆண்டும், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள ஆசிரியர்களுடன் இணைந்து நடத்தி வரரப்படுவது குறிப்பிடத்தக்கது.
கல்வி புகட்டும் ஆசானுக்கு நன்றியுணர்வை காட்டும் தினம்தான், இந்த ஆசிரியர் தினம். தாய் தந்தைக்குப் பிறகு அவர்களுக்கு ஈடாக நம்மால் போற்றபட வேண்டியவர்கள் நமது ஆசிரியர்களே.
அதுவும், தாய்போல அரவணைத்து நமக்கு கல்வி கற்றுத்தரும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு என்றுமே நம் சமுதாயத்தில் ஒரு சிறப்பிடம் உண்டு.
அந்த வகையில், அவர்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த சிறப்பு பிரார்த்தனை, வரவேற்கத்தக்கது.