
புத்ராஜெயா, டிசம்பர்-11 – ஆபத்து அவசரங்களின் போது பொது மக்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் விபத்து, தீ, அல்லது பிற பேரிடர் சம்பந்தமான அவசர புகார்களை அளிக்க வரும் பொது மக்களை, அவர்கள் அணிந்துள்ள உடையைக் காரணம் காட்டி எந்த அரசுத் துறையும், போலீஸ் நிலையங்களும் தடுக்கக் கூடாது என, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azri Abu Bakar கூறியுள்ளார்.
உடை காரணமாக எந்த அவசர உதவியும் மறுக்கப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது என்றார் அவர்.
அண்மையில் “உடை பொருத்தமானதாக இல்லை” என காரணம் கூறி, புகார் அளிக்க வந்தவர்களை போலீஸ் நிலையங்கள் திருப்பி அனுப்பிய சில வைரல் சம்பவங்களுக்கு பின், அரசாங்கம் இந்த 2020 ஆடைக் கட்டுப்பாட்டு விதி தொடர்பான சுற்றறிக்கையை முழுமையாக மறுபரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆபத்து அவசரங்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும், ருக்குன் நெகாரா கோட்பாடுகளுக்கு ஏற்ப பண்புடன் உடை அணியும்படி பொது மக்கள் ஊக்குவிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
முன்னதாக ஆடைக் கட்டுப்பாடு சர்ச்சையானதை அடுத்து, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூட தனது கடும் கண்டனத்தை பதிவுச் செய்தார்.
மக்களுக்கு சேவை செய்வதே அரசு ஊழியர்களின் கடமை என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.



