
கோலாலம்பூர், மே-13 – பி.கே.ஆர் கட்சிக்கான இந்தியச் சமூகத்தின் ஆதரவு இன்னமும் வலுவோடு தான் உள்ளது.
அவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் மடானி அரசுக்கும் பிளவுப்படாத ஆதரவை வழங்கி வருவதாக, டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியச் சமூகத்தின் சமுகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கம் பலவற்றை செய்து வருகிறது.
100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கரத்தை வலுப்படுத்தியது, இந்தியத் தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டம், Brief-I கடனுதவித் திட்டம், வணிகம், பெண் என ஏராளமான திட்டங்களை அடுக்குக் கொண்டே போகலாம்.
இந்த குறுகிய காலத்தில் இத்தனையையும் செய்துள்ள, இன்னமும் செய்து வரும் பி.கே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தை, எப்படி இந்தியர்கள் ஆதரிக்காமல் போவார்கள் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன் கேட்டார்.
பி.கே.ஆர் மற்றும் பி.எச் எனப்படும் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கான இந்தியர்களின் ஆதரவு சரிந்து வருவதாக கூறப்படுவதை மறுத்து பேசுகையில், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அவ்வாறு சொன்னார்.
பி.கே.ஆர் மற்றும் பி.எச் கூட்டணிக்கான இந்தியர்களின் ஆதரவு 38 விழுக்காடு சரிந்திருப்பதாக, பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி முன்னதாகக் கூறியிருந்தார்.
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடும் ரஃபிசி, அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவ்வாறு சொன்னார்.
சீனர்களைப் போலவே இந்தியர்களும், குறிப்பாக நடுநிலை வாக்காளர்களும் ஒற்றுமை அரசாங்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
எனவே, அவ்விஷயத்தில் PH அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இசா அன்வாரிடமிருந்து போட்டியை எதிர்நோக்கியுள்ள ரஃபிசி கூறினார்.