
வாஷிங்டன், ஜூன்-18 – எந்தவொரு நிபந்தனையுமின்றி ஈரான் சரணடைய வேண்டுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வற்புறுத்தியுள்ளார்.
ஈரானிய உச்சத் தலைவர் அயதொல்லா அலி கொமேனி எங்கு ஒளிந்துள்ளார் என்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.
அவரின் ‘கதையை முடிக்க’ நீண்ட நேரம் ஆகாது; இருந்தாலும் அவரை நாங்கள் கொல்ல விரும்பவில்லை என டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் கூறினார்.
அமெரிக்கத் துருப்புகள் மீதும் அமெரிக்க பிரஜைகள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டுமே, தற்போது வரை அமைதிக் காக்கிறோம்.
இல்லையென்றால் அயதொல்லா இந்நேரம் ‘அஸ்தமனம்’ ஆகியிருப்பார்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; நிபந்தனை ஏதும் இல்லாமல் சரணடைந்து விட்டால் பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஈரான் – இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்; ஆனால் ஈரானின் பிடிவாதம் என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது என டிரம்ப் சினத்துடன் கூறினார்.
அணுவாயுதம் தொடர்பில் உடன்படிக்கைக்கு வருமாறு தான் கேட்கிறோம்; ஆனால் ஈரான் அடம்பிடிக்கிறது; இது கொஞ்சமும் நல்லதல்ல என டிரம்ப் சொன்னார்.
ஈரானிலிருந்து 9.5 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென கேட்டுக் கொண்ட பிறகு, தனது Truth Social சமூக ஊடகத்தில் வரிசையாக வைத்த பதிவுகளில் டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
5 நாட்களைக் கடந்துள்ள ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் கணிசமான சேதங்களை விளைவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் உதவியுடன், ஈரானின் அணுவாயுத உலைகளை அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மொத்தமாக தரைமட்டமாக்கி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது.