
வாஷிங்டன், ஜூன்-22 – ஈரான் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல் ‘அமோக’ வெற்றியடைந்திருப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வருணித்துள்ளார்.
ஈரானின் 3 முக்கிய அணு சக்தி நிலையங்களை அமெரிக்க வான்படை தாக்கி அழித்துள்ளது.
இது உலகில் வேறெந்த நாட்டு இராணுவத்தாலும் நெருங்க முடியாத சாதனை என அவர் கூறிக் கொண்டார்.
தனது நெருங்கிய பங்காளியான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹுவின் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து இன்று காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ட்ரம்ப் அதனைக் குறிப்பிட்டார்.
“உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான் தான்; அதன் அணு சக்தி அச்சுறுத்தலை ஏற்க முடியாது” என திட்டவட்டமாகக் கூறிய ட்ரம்ப், அமைதிப் பாதைக்கு அந்நாடு திரும்ப வேண்டுமென்றார்.
“அமைதி அல்லது அழிவு” என்ற துருப்புச் சீட்டை ஈரானே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
இல்லையென்றால் இதை விட மோசமான அழிவுகளை ஈரான் எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் சில இடங்களைத் தகர்க்க அமெரிக்கா குறிவைத்துள்ளதால், இனியும் பிடிவாதம் பிடிப்பது ஈரானுக்கு நல்லதல்ல என்றார் அவர்.
இஸ்ரேல் – ஈரான் மோதல் இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், சனிக்கிழமை காலை அமெரிக்கா அதில் நேரடியாக தலையிட்டு ஈரானைத் தாக்கியது.
Fordow, Natanz, Esfahan ஆகிய 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக யுரேனியம் செறிவூட்டலின் முக்கிய நிலையமான Fordow அணு சக்தி மையத்தில் முழுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்து ஈரானின் பதிலடி எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் உள்ளபடியே அச்சமும் அதிகரித்துள்ளது.