
கோலாலம்பூர், ஜனவரி 13 – மலாய் முஸ்லிம்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும், ஏனெனில் உலகைக் காப்பாற்றும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்று PAS தலைவர் Abdul Hadi Awang தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் முன்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் பொற்கால நாகரிகத்தை உருவாக்கியதாகவும், மலாய் உலகப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வளங்களும் மனித பலமும் நிறைந்தவர்களாகவும் இருந்து வந்தனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில் PAS எந்த ஒப்பந்தத்தையும் துரோகம் செய்ததில்லை என்றும் சிலர் விலகினாலும் கட்சி மேலும் வலுப்பெறுகிறது என்றும் அவர் விளக்கினார். ஒரே நம்பிக்கையும் குடும்ப உறவுகளும் ஒற்றுமைக்கு அடிப்படை எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இஸ்லாம் மன்னிப்பையும் பொறுமையையும் ஊக்குவிக்கிறது என்றும், மலாய் முஸ்லிம்கள் ஒன்றிணைவதால் மற்ற மதத்தினர் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். அமைதியான மனித உறவுகளும் பரஸ்பர மரியாதையும் இஸ்லாமின் முக்கிய கொள்கை என அவர் தெரிவித்தார்.



