
பெட்டாலிங் ஜெயா, மே-8, தம் மீதான எரிதிராவகத் தாக்குதல் விசாரணை மூடப்பட்டிருப்பது குறித்து, தேசியக் கால்பந்து நட்சத்திரம் ஃபைசால் ஹலிம் பெரும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மே 5-ஆம் தேதி முகத்திலும், கைகளிலும் கடுமையானத் தீப்புண் காயங்களுக்கு இலக்காகும் அளவுக்கு தமக்கு நேர்ந்த அக்கொடூரத்திற்கு ஃபைசால் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
அதற்கு நாங்களும் போலீஸுடன் அணுக்கமாக ஒத்துழைத்தோம்; மக்களவை சபாநாயகர், உள்துறை அமைச்சர், சட்டத் துறைத் தலைவர் உள்ளிட்டவர்க்ளைச் சந்தித்து, அவ்விசாரணைக்கு முன்னுரிமை வழங்குமாறு வலியுறுத்தினோம்.
ஆனால், இப்படி திடீரென்று விசாரணை மூடப்பட்டிருப்பதால், ஃபைசால் உள்ளபடியே மனமுடைந்துப் போயுள்ளார் என, அவரின் வழக்கறிஞர்கள் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
ஃபைசால் ஹலிம் விசாரணையில் NFA அல்லது ‘மேல் நடவடிக்கை இல்லை’ என சட்டத் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்திருக்கும் கடிதம் கிடைத்திருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினார்.
தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் சந்தேக நபர் எவரையும் அடையாளம் காண்பதில் போலீஸ் தோல்வி கண்டதால், சட்டத் துறை அலுவலகம் அம்முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது.
ஹரிமாவ் மலாயா மற்றும் சிலாங்கூர் அணியின் முன்னணி ஆட்டக்காரராக வலம் வந்த 26 வயது ஃபைசால் ஹலிம், கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு பேரங்காடிக்கு வெளியே எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளானார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, அதற்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்தன.