
கோலாலும்பூர், ஜூன் 30 – நேற்று மதியம் 1.30 மணியளவில், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபத்தில், கண்ணதாசன் அறவாரிய ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டின் கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்ச்சி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா வின் தேசிய துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களின் தலைமையில் துவக்கம் கண்டது.
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் மற்றும் பாடல்களின் சிறப்புகளையும், அவரின் கவித்தத்துவங்களையும் போற்றி புகழ்ந்து, நிகழ்வில் ஒன்றுகூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்புரையாற்றினார்.
கவிஞர் எ. பெர்னாட்ஷா, இசைவாணி இந்திரா விஜயலெட்சுமி மற்றும் தமிழ்ச்சுடர் தாமல். கோ. சரவணன் ஆகியோர் இலக்கிய உரையாற்றியதைத் தொடர்ந்து கவித்திலகம் பாவலர் கோவேந்தன், மேடையில் தமது சிறப்பு கவிதைகளைப் படைத்தது, இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.
கண்ணதாசன் விழா 2025 இன் முக்கிய அங்கமாக பினாங்கின் முன்னாள் போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் அவர்களுக்கு தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியம் விருதும், ஓவியர் லேனா அவர்களுக்கு சாதனைத் தலைவர் துன் சாமிவேலு விருதும், திருமதி கமலா சரஸ்வதி அவர்களுக்கு தமிழவேல் கோ.
சாரங்கபாணி விருதும், திருமதி எல். ராமன் அவர்களுக்கு மக்கள் தலைவர் டான் ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் விருதும் மற்றும் திருமதி விஜயவாகினி ராஜு அவர்களுக்கு இறையருட்கவிஞர் சீனி னை முகமது அவர்களின் விருதும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, இந்திரா விஜயலக்ஷ்மி, தாமல் கோ. சரவணன், கமலா சரஸ்வதி மற்றும் கருகார்த்திக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் தங்களின் அனுபவங்களை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
கவிதை இலக்கியம் பேசும் அரசியல் தலைவர் என்று மலேசிய மக்களால் போற்றப்படும் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், நமது மலேசிய திருநாட்டிலே மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல தமிழ் சார்ந்த நிகழ்வுகளையும், தமிழ் தொண்டும் ஆற்றி வருவது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.
அந்த வகையில் ஆண்டு தோறும் கவிஞர் கண்ணதாசன் விழாவை தவறாமல் ஏற்பாடு செய்து, மலேசிய தமிழ் மக்களை தமிழோடு பயணிக்க செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள்.