
கோலாலம்பூர், அக்டோபர்-27,
மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை நிலைநாட்டும் முயற்சியாக, பள்ளிகளில் திருக்குறளை பாடமாக போதிக்க, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் பரிந்துரைத்துள்ளார்.
அண்மைய காலமாக மாணவர்களிடத்தில் காணப்படும் ஒழுக்கப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வாக அவர் அதனைப் பரிந்துரைத்தார்.
அந்நோக்கத்திற்கு பள்ளிகளில் ரோத்தான் பிரம்படியை திரும்பக் கொண்டு வருவதே சிறந்த தீர்வாக இருக்கும் என பரவலாகக் கூறப்படுகிறது.
என்றாலும் அதை விட, மாணவர்களுக்கு நற்பண்புகளை விதைப்பதே ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.
1,330 குறள்களை ஊள்ளடக்கிய திருக்குறள், தனிமனித ஒழுக்கம் முதல் மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து நற்பண்புகளையும் போதிக்கிறது.
அதே போல்,
கன்ஃபூசியனிசம் எனப்படும் பண்டைய சீனாவில் தோன்றிய சிந்தனை மற்றும் நடத்தை முறையையும் பள்ளிகளில் போதிக்கலாம்.
கன்ஃபூசியஸால் நிறுவப்பட்ட இது சிறந்த வாழ்க்கைத் தத்துவ முறைகளில் ஒன்றாக உள்ளது.
இவ்விரண்டையும் தமிழ் சீனப் பள்ளிகள் மட்டுமின்றி தேசியப் பள்ளிகளிலும் போதிக்க வேண்டும்.
என்னதான் ஏட்டுக் கல்வி முக்கியமென்றாலும், நன்னெறி மற்றும் பண்புநலன்களைப் போதிப்பது பள்ளிக் கல்வியை முழுமைப்படுத்துமென ராயர் சொன்னார்.
மக்களவையில் 2026 பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது அவர் அப்பரிந்துரையை முன்வைத்தார்.



