
ஷா அலாம், ஏப் 28 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA மற்றும் நெகிரி செம்பிலானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப் பொருளில் சம்பந்தப்பட்ட இரண்டு கும்பல்கள் முறியடிக்கப்பட்டதோடு 14.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சா மொட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏப்ரல் 21 ஆம்தேதி முதல் ஏப்ரல் 23 ஆம்தேதிவரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை, KLIA வில் உள்ள மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் துணை போலீஸ் உதவியுடன் , போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால், மேற்கொள்ளப்பட்தாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் ( Shazeli Kahar) தெரிவித்தார்.
இந்தக் கும்பல்கள் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும், அவற்றில் ஒரு வழக்கில் KLIA ஒரு டிரான்சிட் அல்லது இடைவழி மையமாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடக்கக் கட்ட விசாரணை மூலமாக சந்தேக நபர் பண்டார் ஸ்ரீ செண்டாயானில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றபோது அந்த வளாகத்தில் 153. 7 கிலே எடையுள்ள கஞ்சா மொட்டுகள் அடங்கிய 289 பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கொண்ட 18 சாக்குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 12.3 மில்லியன் ரிங்கிட்டாகும். இது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு 35,000 ரிங்கிட் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் , 15,000 ரிங்கிட் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
KLIA விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கையில் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டபோது, சந்தேகத்திற்குரிய பயணப் பெட்டியின் உரிமையாளர் என நம்பப்படும் 24 வயது வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு சுமார் 30 கிலோ எடையுள்ள, 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா மொட்டுகள் அடங்கிய 60 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ( ( Shazeli Kahar) கூறினார்.



