
கோலாலும்பூர், ஜூன் 30 – கடந்த சனிக்கிழமை, முதல் முறையாக மலேசியாவில், செராஸ் வாவாசான் மெனாரா ‘PGRM’ மண்டபத்தில் ஜீ தமிழின் ‘சரிகமபா லில்’ஸ் சாம்ப்ஸ்’ 2025 (SaReGaMaPa Lil’s Champs Concert) இசை நிகழ்ச்சி டத்தோஸ்ரீ டாக்டர் எம் சரவணன் தலைமையில் மிக சிறப்புற நடந்தேறியது.
இந்த நிகழ்வில் சரிகமபா புகழ் மலேசிய பாடகி சிறுமி ஹெமித்ரா, இந்தியாவைச் சேர்ந்த சரிகமபா பாடகர்கள் திவேனேஷ், யோகஸ்ரீ, ஸ்ரீமதி, மஹதி மற்றும் அபினேஷ் உள்ளிட்ட திறமையான இளம் கலைஞர்களின் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
டத்தோ ஸ்ரீ எம் சரவணன் தமது சிறப்புரையில் குழந்தைகளின் திறமைகளை திறம்பட வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்கு ஏற்பாட்டாளர் விஷாலுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.
இந்த அற்புதமான இசை நிகழ்விற்கு முக்கிய உதவி வழங்கிய தஸ்லி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் ரவி, திறமையான இளம் கலைஞர்களைப் பார்ப்பதில் தமக்கு பெருமையாக இருப்பதாகவும் உள்ளூர் திறமைகளை, குறிப்பாக இந்திய சமூகத்தின் திறமைகளை ஆதரித்து அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதனிடையே, விஷால் தம்மை சுற்றியிருக்கும் நல்லுள்ளங்களின் ஆதரவு இல்லையென்றால் இந்த அற்புதமான இசை நிகழ்ச்சி நடைப்பெற சாத்தியமில்லை என்றும் பெரும் ஆதரவை வழங்கிய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும் தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த இசை நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவதற்கு உதவி கரம் நீட்டியவர்களுக்கு கௌரவங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டதோடு டத்தோ டாக்டர் ரவிக்கு சிறப்பு பாராட்டும் செய்யப்பட்டது.
இதனிடையே இந்தியாவில் நடைப்பெற்ற சரிகமப பாடல் போட்டியில் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்ற ஹெமித்ராவிற்கு 20,000 ரிங்கிட் வெற்றி தொகையும் கௌரவ விருதும் இந்நிகழ்ச்சியின்போது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.