
ஜெனிவா, ஜூன்-28 – கோவிட்-19 எங்கு மற்றும் எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனமான WHO அறிவித்துள்ளது.
4 ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்வுகளுக்குப் பிறகும், தேவையான தகவல்கள் கிடைக்காததால் தெளிவான முடிவுகளுக்கு வர முடியவில்லை.
எனவே, கோவிட் கிருமி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதும் ஆய்வகத்திலிருந்து தவறுதலாக வெளியாகியிருக்கலாம் என்பதும் உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளும் தற்போதைக்கு ‘நியாயமானவையாகவே’ இருக்கலாம் என, WHO தலைவர் டெட்ரோஸ் கூறினார்.
2021-ஆம் ஆண்டு, WHO குழு சீனாவின் வூஹானில் ஆய்வு நடத்தியபோதும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆய்வகத்திலிருந்தே கிருமி கசிந்தது என்ற குற்றசாட்டு துச்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
அதன் பின்னர் SAGO என்ற புதிய அறிவியல் குழு அமைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த குழுவின் அறிக்கையில், கோவிட் கிருமி வூஹான் கடலுணவுகள் சந்தையில் தோன்றியதா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும், ஆய்வக உள்வாங்கல் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் எந்தச் சாத்தியக்கூறுகளுக்கும் முடிவுக்கு வர இயலவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆரம்பகால நோயாளிகளின் கிருமி தகவல்கள், சந்தையில் விற்பனையான விலங்குகள் குறித்த விவரங்கள், வூஹான் ஆய்வக பாதுகாப்பு நிலைகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை தருமாறு பலமுறை கேட்டும், சீனா பதில் தரவில்லை என
டெட்ரோஸ் விமர்சித்தார்.
இந்நிலையில், கோவிட் அல்லது கொரோனா எவ்வாறு தோன்றியது என்பதை கண்டறிவது, உயிரிழந்த மில்லியனுக்கும் மேலான மக்களின் நினைவாகவும், எதிர்கால தொற்றுநோய்களை தடுப்பதிலும் ஒரு நெறிமுறைக் கடமை என WHO வலியுறுத்தியுள்ளது