
தெலுக் இந்தான், ஜூன்-22 – தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங்கில் கேளிக்கை மையமொன்றில் ஆயுதமேந்தி கொள்ளையிட்ட 3 முகமூடிக் கொள்ளைக்காரர்களைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
ஜூன் 15-ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
37 வயது அந்த ஆடவர் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் என, ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் ACP Dr பக்ரி சைனால் அபிடின் கூறினார்.
பேராக் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் குழு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில், இரத்தக் கறை, 2 கைவிரல் ரேகைகள், உடைந்த கண்ணாடிச் சிதறல்கள், CCTV கேமரா பதிவு உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.
இதையடுத்து மேலுமிருவரையும் சீக்கிரமே அடையாளம் கண்டு, மொத்த கும்பலையும் கைதுச் செய்ய முடியும் என பக்ரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது பாராங் கத்தியுடன் அக்கேளிக்கை மையத்திற்குள் நுழைந்த 3 கொள்ளையர்களும், அங்கிருந்த பொருட்களை போட்டுடைத்து, பணியாளர் ஒருவரது iPhone 14 Pro கைப்பேசியையும், கல்லாப்பெட்டியிலிருந்த 2,000 ரிங்கிட் ரொக்கத்தையும் திருடிச் சென்றனர்.
கேளிக்கை மைய வாடிக்கையாளர்கள் இருவரை பாராங் கத்தியால் தாக்கிக் காயம் விளைவித்ததோடு, அவ்வளாகத்திலிருந்த 4 வாகனங்களின் கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்துச் சென்றுள்ளதாக பக்ரி சொன்னார்.
அச்சம்பவத்தின் வீடியோ வைரலாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது