
சிட்னி, அக்டோபர்-6,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் Inner West பகுதியில் 20 பேருக்குக் காயத்தை ஏற்படுத்திய திடீர் துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மற்ற 19 பேரும் கண்ணாடி மற்றும் உலோக துண்டுகள் பட்டு சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான 60 வயது ஆடவர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அம்முதியவர் சுமார் 100 துப்பாக்கி சூட்டுகள் நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, வாகனங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை நோக்கி ஓர் ஆடவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தகவல் வந்ததும், போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
“முதலில் அது பட்டாசு சத்தமோ அல்லது கண்ணாடி உடையும் சத்தமோ என்று நினைத்தேன். ஆனால் உடனே ஒரு காரின் முன் கண்ணாடி மற்றும் பேருந்து நிலையத்தின் கண்ணாடிகள் சிதறின” என சம்பவத்தை நேரில் கண்ட அலுவலக பணியாளர் ஒருவர் கூறினர்.
போலீஸார் அப்பகுதியை முற்றுகையிட்டு, வணிக வளாகத்தின் மேல் மாடியில் இருந்த சந்தேக நபரை கைதுச் செய்து, இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
கைது நடவடிக்கையில் சிராய்ப்புக் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது மிகவும் பயங்கரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் என்றாலும் இதற்கு தீவிரவாதம் அல்லது குற்றவியல் கும்பல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1996-ஆம் ஆண்டு தாஸ்மானியாவின் Arthur துறைமுகத்தில் 35 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் தானியங்கி துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டதால், அங்கு இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடக்கின்றன.