
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் வெளிநாட்டவர் நடத்தி வருவதாக நம்பப்படும் 22 கேளிக்கை மையங்களில், சனிக்கிழமை இரவு அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.
சிலாங்கூரில் மட்டுமே 22 கேளிக்கை மையங்கள் சோதனையிடப்பட்டன.
முறையான உரிமம் இல்லாமலும், பயணப் பத்திரம் அல்லது வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்தும், அவை இயங்கி வந்துள்ளன.
அந்த Op Mega Pusat Hiburan சோதனையில் மொத்தமாக 288 வெளிநாட்டவர்கள் கைதானதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அவர்களில், வாடிக்கையாளர்களை ‘கவனிக்கும்’ 66 மியன்மார் பெண்களும் அடங்குவர்.
நாடுகள் வாரியாகப் பார்த்தால், அவர்கள் மியன்மார், வங்காளதேசம், நேப்பாளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாவர்.
ஏராளமான மதுபானங்கள், ரொக்கப் பணம், கேளிக்கை உபகரணங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது போன்ற அதிரடிச் சோதனைகள் தொடரும் என அறிவித்த குமார், சட்டவிரோதமான மற்றும் பொது அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுடன் போலீஸ் அனுசரணை காட்டாது என்றார்.
புக்கிட் அமானின் ஓர் உயரியப் பதவிக்கு மாற்றலாகி வந்த பிறகு, டத்தோ குமார் வெளியிடும் முதல் அறிக்கை இதுவாகும்.