
புத்ராஜெயா, ஜூலை-1-சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இணையத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், பொது மக்களின் இரகசியத் தரவுகள் மற்றும் மருத்துவப் பதிவுகள் எதுவும் கசியவில்லை என சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த வாரம் நிகழ்ந்த இந்த ஊடுருவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சின் பொதுத் தகவல் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தளம் நிறுவன மற்றும் பொதுத் தகவல்களைப் பரப்புவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் கடுமையான பாதுகாப்புடன் கூடிய தனி உள்கட்டமைப்பில் பராமரிக்கப்படுவதால் அவை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது வலைத்தளத்தை மீட்டெடுக்கும் பணிகள் இணையப் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக நடைபெற்று வரும் வேளை, அமைச்சின் முக்கிய மருத்துவச் சேவை விநியோக முறைகள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கி வருகின்றன.



