
ஜோகூர் பாரு – ஆகஸ்ட்- 4 – சுல்தானா ரொகாயா அறக்கட்டளை ஏற்பாட்டில் ஜோகூர் பாருவில் நடைபெற்ற Meniti Cakerawala இசை நிகழ்ச்சிக்கு, மாட்சிமைத் தங்கிய பேரரசியார் ராஜா சரித் சோஃபியா (Raja Zarith Sofiah) சிறப்பு வருகை புரிந்தார்.
பட்டத்து இளவரசரின் துணைவியார் Che’ Puan Mahkota Khaleed-வுடம் உடன் வந்திருந்தார். வசதி குறைந்த இந்தியச் சமூக மக்களுக்கு உதவும் நோக்கில் பேரரசியார் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகளில் இந்த அறக்கட்டளையும் ஒன்றாகும்.
இந்நிலையில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 5 பேருக்கு அந்நிகழ்வில் நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது. தவிர, நிதி திரட்டும் முயற்சியில் YSR-சின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தையும் ராஜா சரித் சோஃபியா அறிமுகம் செய்து வைத்தார்.
‘அறிவியலும் பிரபஞ்சத்தின் காதல் உணர்வும்’ என்ற தலைப்பிலான இந்த இசை நிகழ்ச்சி, சுத்ரா அறக்கட்டளை, YSR மற்றும் பிரபல வானியற்பியல் நிபுணர் நிறைநிலை பேராசிரியர் தான் ஸ்ரீ Dr மஸ்லான் ஒத்மான் ஒத்துழைப்பில் அரங்கேறியது.
நடனம், திரைப்படம், காட்சிக் கலை, இசை மற்றும் கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தயாரிப்பானது, Muhammad Haji Salleh, Johan Jaaffar, Chacko Vadaketh மற்றும் மறைந்த கலைஞர் Mano Maniam ஆகியோரின் குரல்களில் ஒலித்தது.
கலைக் கைவண்ணம் Jalaini Abu Hassan மேற்பார்வையில் இடம்பெற்றது. YSR அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன், ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சுமார் 500 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.