
கோலாலம்பூர், ஜூலை 11 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவியை தற்கவைத்துக் கொள்வதற்கான லட்சியத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கோடிகாட்டியுள்ளார்.
உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஹடி அவாங், தேசிய இருதய சிகிச்சை மையத்தில் தாம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் தற்போது நன்றாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
சாத்தியமானால் பாஸ் தலைவர் பதவியில் இருக்கும்போதே தாம் இறந்துவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடல் நல காரணங்களினால் 2003 ஆம் ஆண்டு முதல் தாம் வகித்துவரும் பாஸ் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக விரும்புவதாக வெளியான தகவல் குறித்து கருத்துரைத்தபோது ஹடி அவாங் இதனைத் தெரிவித்தார்.
7 தவணைகளாக மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஹடி அவாங் சுகாதார காரணங்களினால் பாஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது குறித்த தனது விரும்பத்தை வெளியிட்டதாக கடந்த மாதம் சினார் ஹரியான பத்திரிகை தகவல் வெளியிட்டது.
அண்மையில் திரெங்கானுவில் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தாக கூறப்படுகிறது .
இவ்வாண்டு கட்சித் தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு உயர் பதவிகளுக்கு போட்டியிருக்கும் என இதற்கு முன் தகவல்கள் வெளியாகின.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி தேர்தலுக்குப் பின், ஹடியும் , பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் ஆகியோரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை.