
கோலாலம்பூர், ஜூலை.01 – மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, ஒருங்கிணைந்த ஒரே அமைப்பை நோக்கிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, ஈராண்டுகளுக்குள் தனியுரிமை QR பணப் பரிவர்த்தனை வலையமைப்புகளைப் படிப்படியாக அகற்றவிருக்கிறது.
தற்போதுள்ள தனியுரிமை QR வலையமைப்புகள் 2028 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். அதே சமயம், இக்காலக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வலையமைப்புகளில் புதிய வர்த்தகர்களை இணைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுவதாக ஒருங்கிணைந்த நிதிப் பரிமாற்றக் கட்டமைப்புக் கொள்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட தரப்புகள் செயல்படுத்தும் தனித்தனி முறைகளைச் சார்ந்திருப்பதற்குப் பதில், பயனீட்டாளர்கள் எந்தவொரு வங்கி அல்லது மின்-பணப்பைச் செயலியைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஒரே QR வலையமைப்பின் மூலம் பணம் செலுத்த முடியும். பயனீட்டாளர்களுக்கு எளிதான முறையை அறிமுகப்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
நடப்பில் DuitNow Transfer, DuirNow QR சேவைகளை வழங்கி வரும் PayNet, பேங்க் நெகாராவில் 35.5 விழுக்காட்டு பங்குகளைக் கொண்டுள்ளது. பேங்க் நெகாராவைத் தவிர்த்து நாட்டின் மிகப் பெரிய வங்கியான Maybank உட்பட 11 நிதி நிறுவனங்களும் PayNetடில் பங்குதாரர்களாக இருக்கின்றன.



