
ஜோகூர், ஜூலை 10 – நாளை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்சுரி மொக்தார் மற்றும் பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முஹியித்தீன் யாசின் ஆகியோர், MIPP சார்பில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
புக்கிட் பெர்மை, பாலோ, கோத்தா இஸ்கந்தார், பெமானிஸ் மற்றும் பெர்மாஸ் ( Bukit Permai, Paloh, Kota Iskandar, Pemanis, Permas) ஆகிய தொகுதிகளில் MIPP வேட்பாளர்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் களமிறங்கியுள்ளனர்.
இந்திய சமூகத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கும் கட்டியெழுப்பலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்த ஷம்சுரி, அந்தப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொள்கை வடிவமைப்பிலும் சமூக முன்னேற்றத்திற்கான முடிவெடுக்கும் நிலைகளிலும் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



