
ஜோகூர் பாரு, ஜூலை 7 – ஜோகூர் பாருவில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் Bandar Dato onn னுக்கு வெளியேறும் இடத்தில் 22 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் , சிமென்ட் ஏற்றிச் சென்ற டிரெய்லரில் விபத்திற்குள்ளானது.
இன்று பிற்பகல் மணி 1.10 அளவில் அவசர அழைப்பு கிடைத்தவுடன் கெம்பாஸ் தீயணைப்பு நிலயத்தைச் சேர்ந்த 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் முதிர்நிலை அதிகாரி முகமட் அஸிஸி ஸக்கரியா தெரிவித்தார்.
அந்த வேனில் 22 மாணவர்கள் இருந்த வேளையில் வேன் ஓட்டுனர் தனது இருக்கையில் சிக்கிக் கொண்டார். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர் என இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் அஸிஸி தெரிவித்தார்.
சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி வேன் ஓட்டுனர் வெளியே எடுக்கப்பட்டதோடு மற்றொரு மாணவனுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் காயம் அடைந்த இரண்டு மாணவிகள் அவசர மருத்துவ பாதுகாப்பு சேவை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக டிரெய்லர் மற்றும் பள்ளி வேன் விபத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுமக்கள் உதவும் 10 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.