
வாஷிங்டன், ஜூன்-6 – நெருங்கிய பங்காளிகளாக இருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கும் இடையே வெடித்துள்ள மோதல் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்கு தனது Space X நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் பணியை நிறுத்துமென மாஸ்க் எச்சரித்து, மோதலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்க, இலோன் மாஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கும் அரசாங்க மானியங்கள் மற்றும் குத்தகைகளை நிறுத்துவதே எளிய வழியென, டிரம்ப் கூறியதற்கு பதிலடியாக மாஸ்க் அவ்வாறு எச்சரித்தார்.
“குத்தகை ஒப்பந்தத்தை நிறுத்தி தான் பாருங்களேன், அடுத்த நிமிடமே ‘டிராகன்’ விண்கலம் பணியை நிறுத்தும்” என மாஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாசா, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் அங்கிருந்து பூமிக்கு கொண்டு வரவும் Space X நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலத்தைத் தான் நம்பியுள்ளது.
சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பில் அதனுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மனிதர்களை orbit எனும் சுற்றுப்பாதையில் பறக்கவிடும் ஆற்றல் கொண்ட ஒரே அமெரிக்க விண்கலம் இந்த ‘டிராகன்’ விண்கலமாகும்.
இந்நிலையில் மாஸ்க் விடுத்துள்ள மிரட்டலால் நாசா மிரண்டு போயுள்ளது.
“நான் மட்டும் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்; அவர் உண்மையில் நன்றிக் கெட்டவர்” என மாஸ்க் வார்த்தைகளில் கொந்தளித்தார்.
இது அரசியல் நோக்கர்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைத் தாண்டி தான் டிரம்ப்பை நெருங்க முடியும் என்ற ரீதியில் வலம் வந்த இலோன் மாஸ்க், திடீரென அவருக்கு எதிராக திரும்புள்ளார்.
டிரம்பின் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டிக் கொடுத்த இலோன் மாஸ்க், டிரம்ப் அதிபரானதும் அரசின் செயல் திறன் மேம்பாட்டுத் திறன் துறையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
எனினும் டிரம்ப்பின் வரிக் கொள்கைகளுடன் ஏற்பட்ட மோதலால் மே மாத மத்தியில் அவர் பதவி விலகினார்.