
கோலாலம்பூர், ஏப்ரல்-24, 20 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை போலியாக்கியதற்காக, கோலாலம்பூரில் 15 மலேசியப் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் MyKad அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த போது, 1957 பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ், வேண்டுமென்றே அல்லது தெரிந்தே தவறான தகவல்களை வழங்கியதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
செவ்வாய்க்கிழமை கைதான 50 முதல் 70 வயதிலான அப்பெற்றோர்கள், தனித்தனியாக 7 மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.
2004 முதல் 2022 வரையில் கோலாலம்பூரின் தாமான் மலூரி, பண்டார் துன் ரசாக், கெப்போங் ஆகிய இடங்களில் உள்ள JPN அலுவலகங்களில் அக்குற்றம் புரியப்பட்டது.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால், கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 800 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட் வரை அபராதம் விதித்தது.
தத்தெடுக்கப்பட்ட பெற்றோர்களுக்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உண்மையான பிறப்பு விவரங்களை அவர்கள் கண்டறிய வேண்டும்.
அதாவது, தத்தெடுப்பதற்கு முன் உண்மையான பெற்றோரின் பெயர்கள் மற்றும் பிறந்த இடம் போன்ற சரியான பிறப்புத் தகவல்களை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டுமென தேசிய பதிவிலாகாவான JPN கூறியது.
அதுவே 21 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களே நேரடியாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்