
பாலேக் பூலாவ், ஏப்ரல்-18, பினாங்கு, பாலேக் பூலாவ், தெலுக் கும்பாரில் உள்ள தங்கும் விடுதியொன்றில், 2 வயது ஆண் குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான்.
இரவு 10.30 மணியளவில் சம்பவ இடத்தில் தனது தந்தை அவருடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, Luthfan Harraz Azali நீரில் மூழ்கியதாக, பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சசாலீ அடாம் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் பார்க்க வந்திருந்த நண்பரைக் காணவே, அவ்வாடவர் தனது 3 பிள்ளைகளை அந்தத் தங்கும் விடுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
திடீரென கடைசிப் பையனை அறையில் காணாததை அறிந்து பதறிப் போய் தேடியத் தந்தை, நீச்சல் குளத்தில் சுயநினைவற்ற நிலையில் அவன் மிதந்துகொண்டிருந்தது கண்டு அதிர்ந்துபோனார்.
உடனடியாக பாலேக் பூலாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது, சிறுவன் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சவப்பரிசோதனையில், நீரில் மூழ்கியதே சிறுவனின் மரணத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.
கவனக்குறைவாக இருந்தது தொடர்பில், 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது