
தைப்பிங், ஏப் 8 -தைப்பிங் மிருகக்காட்சிசாலை மற்றும் இரவு சபாரியின் திறந்தவெளிச் சூழலில் அருகேயுள்ள காடுகளிலிருந்து வரும் குரங்குகள் தொடர்ந்து சுற்றித் திரிவதால், பார்வையாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.
மிருகக்காட்சிசாலையில் அடிக்கடி காணப்படும் இந்த குரங்குகள் அதன் விலங்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக இல்லை என்றும், மாறாக உணவு தேடி நீண்ட காலமாக இப்பகுதிக்குள் நுழைந்த காட்டு விலங்குகள் அவை என தைப்பிங் நகரான்மைக் கழக தலைவர் முகமட் அக்மால் டாலான் ( Mohamed Akmal Dahalan ) கூறினார்.
காட்டிலுள்ள அந்த குரங்குகள் மிருகக்காட்சிசாலை பகுதியை சுற்றித் திரியும் வாழ்விடத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், உள்ளே வருகின்றன.
அதோடு விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்கள் உள்ளிட்ட உணவு ஆதாரங்களால் அவை ஈர்க்கப்படுகின்றன என முகமட் அக்மால் கூறினார்.
மிருகக்காட்சிசாலையில் குரங்குகள் கூட்டம் சுற்றித் திரிவதையும், அதில் ஒன்று ஒரு சிறுமியை நோக்கி ஓடுவதையும் காட்டும் அண்மையில் வைரலான டிக்டாக் காணொளி குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
பார்வையாளர்கள் உணவை வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அது ஒரு ஆத்திரமூட்டும் செயலாக இருப்பதால், அந்த விலங்குகள் உணவை அணுகவோ அல்லது பறிக்கவோ கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.



