
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் உட்பட அனைத்து நியமனங்களும் சேவை நீட்டிப்புகளும் கூட்டரசு அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தை ஒருவர் புரிந்து கொண்டால், அதன் செயல்முறை தெளிவாக உள்ளது. ஒரு ஆணையம் இருக்கிறது, பிரதமர் இருக்கிறார், மாட்சிமை தங்கிய பேரரசர் இருக்கிறார் என்று இன்று பிரதமர் துறை பணியாளரகளுடனான சந்திப்பின் போது அவர் கூறியதாக பெர்னாமா மேற்கோள் காட்டியது.
அண்மைய நியமனங்களைப் பார்த்தால் , நீதிபதி பதவிகளுக்காக முன்மொழியப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்டு , பின்னர் விவாதத்திற்காக ஆட்சியாளர்களின் மாநாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அன்வார் கூறினார்.
சில தரப்பினரால் முன்மொழியப்படும் எந்தவொரு நியமனமும் அல்லது பதவி நீட்டிப்பு மீதான பரிந்துரைகள் நீதித்துறையின் நேர்மையைக் சீர்குலைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.