
கோலாலம்பூர், மே 13 – ஏப்ரல் 9 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படும் டத்தின் ஸ்ரீ பமெலா லிங் யுவே வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு உட்பட, போலீஸ்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC) அவரின் நடமாட்டத்தைத் தடுத்துள்ளதோடு விசாரணையும் நடத்தி வருவதாக புத்ரா ஜெயா மாவட்டபோலீஸ் தலைவர் துணை கமிஷனர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.
பமெலா பிள்ளைகளின் வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்யும். மேலும் சாட்சிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதோடு இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீசும் சாட்சியத்தை பதிவு செய்யும் நடவடிக்கையும் வரையப்பட்டு வருகிறது.
இதுவரை 27 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு சில சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் தனது தரப்பினர் நிராகரித்துள்ளதாக அய்டி ஷாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பமெலா மகனிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான செயல்முறையை இன்டர்போல் ஏற்பாடு செய்து வருவதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பமெலா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சரவாக்கைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியான பமெலா செராஸிலிருந்து எம்.ஏ.சி.சி சி அலுவலகத்திற்கு இ-ஹெய்லிங் சேவையைப் பெற்ற பிறகு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அவர் சென்ற வாகனத்தை மூன்று கார்கள் தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர் போலீஸ் சீருடை அணிந்த நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.