
ஜோகூர் பாரு, மே-4- ஜோகூர் பாருவில் ஸ்பா மற்றும் உடம்புபிடி மையமொன்றில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வயது குறைந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களில் அறுவர் வியட்நாமியர்கள், நால்வர் இந்தோனேசியர்கள் ஆவர்.
அவர்கள் போலி வேலை வாய்ப்புகளால் ஏமாற்றிக் கூட்டி வரப்பட்டவர்கள் என, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சக்காரியா ஹாபான் கூறினார்.
அவர்களின் சம்பளம் மறுக்கப்பட்டு, நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, கடப்பிதழ்களும் வாங்கி வைத்துக் கொள்ளப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
முழு விசாரணைகள் முடியும் வரை பதின்ம வயது அப்பெண்கள் காப்பகமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், அம்மையத்தில் விபச்சாரம் செய்து வந்ததன் பேரில் 37 வியட்நாமியப் பெண்களும் 16 இந்தோனேசியப் பெண்களும் கைதாகினர்.
WeChat மற்றும் WhatsApp வாயிலாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மணிக்கு 200 முதல் 300 ரிங்கிட் வரையில் அவர்கள் ‘சேவை’ வழங்கி வந்துள்ளனர்.
இது தவிர, துப்புரவுப் பணியாளர்களான இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 11 ஆண்களும், வெளிநாட்டுப் பெண்களைத் தருவித்து வந்த 7 மலேசிய ஆடவர்களும் கைதாகினர்.