
ஜோர்ஜ்டவுன், ஜூன்-30 – பினாங்கு மற்றும் கெடாவின் பல பகுதிகளை நேற்று தாக்கிய புயல் காற்று, வீடுகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியதோடு மரங்களையும் வேரோடும் சாய்த்தது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு மலாக்கா நீரிணையிலிருந்து புயல் தொடங்கி பினாங்கு தீவின் மேற்குப் பகுதியில் உள்ள பாலேக் பூலாவை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதை, செயற்கைக்கோள் படங்களுடன் கூடிய வானிலை செயலிகள் காட்டுகின்றன.
இந்த திடீர் புயல் காரணமாக கெளுகோரின் தாமான் துன் சார்டோனில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் கூரை, அதிகாலை 4.30 மணியளவில் 7 கார்கள் மீது சரிந்து விழுந்ததாக, MBPP எனப்படும் பினாங்கு மாநகர மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன் கூறினார்.
அமுலாக்கக் குழுவினர் வந்தபோது, வாகனங்கள் சேதமடைந்திருப்பதைக் கண்டதாக அவர் சொன்னார்.
MBPP Skuad Pantas பணிப்படை, அந்தப் பகுதியை பாதுகாப்பாகவும் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதாக ராஜேந்திரன் மேலும் கூறினார்.
Lengkok Bawah, Tingkat Besi, Jalan Gurdwara, Paya Kongsi, Lebuhraya Batu Maung போன்ற தீவின் பல பகுதிகளில் புயல் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மரங்களை அகற்றவும் Skuad Pantas பயன்படுத்தப்பட்டது.
எனினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார் அவர்.
இவ்வேளையில் புயல் நேற்று அதிகாலை கெடாவில் குறிப்பாக கூலிம் மற்றும் சுங்கை பட்டாணியில் பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியது.
கூலிமில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் Jalan Mahang, Sungai Lembu, Taman Cendana, Jalan Selasih ஆகியவை அடங்கும்.
சாலைகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன; இதனால் வியாபாரிகள் சிலரது கூடாரங்கள் சேதமடைந்தன.
எனினும் அங்கும் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.