
போர்ட் கிள்ளான்,மார்ச்-22 – மலேசிய வரலாற்றிலேயே முறியடிக்கப்பட்ட மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவமாக, 1.06 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான methamphetamine வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜனவரி 25-ஆம் தேதி கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் (West Port) மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் போலீஸ் அவற்றை பறிமுதல் செய்தது.
166 மில்லியன் போதைப் பித்தர்களுக்கு பிரித்துக் கொடுக்கக் கூடிய அளவுக்கு 33,200 கிலோ கிராம் எடையிலான அப்போதைப் பொருட்கள், 166 தோம்புகளில் அடைக்கப்பட்டு, 2 கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்தன.
ஈரானிலிருந்து வந்ததாக நம்பப்படும் அவ்விரண்டு கொள்கலன்களும் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குக் கடத்தப்படவிருந்ததாக, புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் DCP மாட் சானி @ மொஹமட் சலாஹுடின் ச்சே அலி தெரிவித்தார்.
போலீஸின் சோதனைகளில், அவை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மெழுகு என பதிவுச் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆஸ்திரேலிய மத்திய போலீஸுக்கும் புக்கிட் அமானுக்கும் இடையே பகிரப்பட்ட உளவுத் தகவல்களின் பலனாக இந்நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
இந்நிலையில் அதன் ‘ஏற்றுமதிக்கு’ பொறுப்பான அனைத்துலகக் கடத்தல் கும்பலை அடையாளம் காண ஆஸ்திரேலியப் போலீஸுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக மாட் சானி கூறினார்.