
கோலாலம்பூர், ஜூலை-1- சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் பழுதுபார்க்கும் இரண்டாம் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும்.
வேலையிட சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையான DOSH அதனைத் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் நீடித்து விளங்கவல்ல கான்கிரீட் அடுக்குகளுக்குள், சுமார் 200 மீட்டர் நீளமுள்ள 3 புதியக் குழாய்கள் நிறுவப்படும்.
இந்தக் கட்டத்திற்கான பொறியியல் வடிவமைப்பு இறுதிச் செய்யப்பட்டு வருவதாக, DOSH-சின் தலைமை இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
முதல் கட்டத்தில், சேதமடைந்த பகுதியை உறுதியாகத் தாங்கி நிற்க, சிறப்பு பாலம் போன்ற அமைப்புடன் 210 மீட்டர் அளவிலான தற்காலிக குழாய் அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு சோதனைகளில் கசிவுகள் அல்லது அழுத்தப் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படாததால், இப்பாதை இன்று எரிவாயு விநியோகத்தைத் தொடங்கும்.
அனைத்து பழுதுபார்க்கும் முயற்சிகளிலும், பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அது தெரிவித்தது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, அவசரநிலை ஏற்பட்டால் விரைவான பணிநிறுத்தங்களை அனுமதிக்க, குழாயின் தனிமைப்படுத்தும் வால்வு அமைப்பின் நிகழ்நேர கண்காணிப்புக்கான அணுகலை வழங்க பெட்ரோனாஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 தீ விபத்துக்குப் பிறகு இதே போன்ற சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடிய அதன் எரிவாயு குழாய் வலையமைப்பின் பிற பகுதிகளை பெட்ரோனாஸ் அடையாளம் கண்டுள்ளதாக, DOSH நேற்று கூறியிருந்தது.